ஐக்கிய நாடுகள் சபையின் 2-வது உலக புவிசார் தகவல் மாநாடு-2022 ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி அனுப்பிய வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது
உலக அளவில் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்துக்கு உறுதுணையான இரண்டு தூண்களாக விளங்கி வருவது தொழில்நுட்பம், திறமை மட்டுமே. கடைக்கோடியில் உள்ள கடைசி மனிதருக்கும் அதிகாரமளிக்கும் இலக்கை நோக்கி நாடு வீறு நடைபோட்டு வருகிறது.
அந்த வகையில், வங்கிக்கணக்கு இல்லாத 45 கோடி பேருக்கு வங்கிச் சேவை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம்.
அதேபோன்று, காப்பீடு இல்லாத 13.5 கோடி பேருக்கு காப்பீட்டு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பிரான்ஸ் மக்கள் தொகையைவிட இரு மடங்கு அதிகம்.
இதுதவிர, 11 கோடி குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளும், 6 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. வளர்ச்சி நடவடிக்கைகளில் யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சிறிய அளவிலான சாலையோர வர்த்தகர்கள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனையில் இணைந்து பயனடைந்து வருகின்றனர்.
இந்தியா இளைஞர் சக்தியைஅதிகம் கொண்ட நாடு. எனவே அவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தாகம் அதிகம் உள்ளது.அதன் விளைவாகவே, உலகளவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
மாநாட்டின் கருப்பொருளான 'உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக்கூடாது' என்பது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் காணக்கூடியதாக உள்ளது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
0 Comments