இந்திய தலைநகர் டில்லியில் ஆசிய நாடுகளுக்கு ('கான்டினென்டல்') இடையிலான செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஓபன் பிரிவில் 92 பேர் பங்கேற்றனர். இதன் கடைசி, 9 வது சுற்று போட்டி நடந்தது.
8 சுற்று முடிவில் 6.5 புள்ளி எடுத்திருந்த இந்தியாவின் 17 வயது வீரர், பிரக்ஞானந்தா (தமிழகம்), சக வீரர் அதிபனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா.
இப்போட்டி 63வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 8 சுற்றில் தலா 6.0 புள்ளிகள் பெற்றிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷா, நாராயணன், ஷம்சுதீன், முரளி கார்த்திகேயன் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.
இதையடுத்து 7.0 புள்ளி பெற்ற பிரக்ஞானந்தா, 'நம்பர்-1' இடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தவிர, 2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கவும் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.
இந்திய வீரர்கள் ஹர்ஷா (6.5), அதிபன் (6.5) இரண்டு, மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் 50 பேர் களமிறங்கினர். இதையடுத்து ஒரு போட்டியில் கூட தோற்காமல், 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற நந்திதா (தமிழகம்), தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். அடுத்த இரு இடங்களை பிரியங்கா (6.5), திவ்யா (6.5) பெற்றனர்.
0 Comments