தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (9.05.2023) சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஏசியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் லிமிடெட் நிறுவனம் 1891 கோடி ரூபாய் முதலீட்டில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கட்டமைக்கப்பட்ட ஊக்கச் சலுகைகள் (Structured Package of Assistance) வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் இடையே மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இந்நிறுவனத்தில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.
மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள, உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
தமிழ்நாட்டில் அமையவுள்ள Mitsubishi Electric-ன் தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) தயாரிப்பு நிறுவனமாகவும், உலகளவில் குளிர்சாதன இயந்திரங்கள் உற்பத்தியில் ஜப்பான், தாய்லாந்து, சீனா, இங்கிலாந்து, துருக்கி, மெக்சிகோ ஆகிய ஆறு நாடுகளுக்கு அடுத்து, ஏழாவது நாடாகவும் இருக்கும்.
மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம், ஜப்பானைத் தவிர, வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் முதலாவது தொழிற்சாலையாகவும் இது இருக்கும்.
இந்நிறுவனம் வணிகரீதியான உற்பத்தியை அக்டோபர் 2025-ல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 60 சதவிகித பெண்களை பணியமர்த்த திட்டமிடப் பட்டுள்ளது.
பிரத்யேகமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதியைக் கொண்டிருக்கும் மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனம், புதுமுறைகாணல் (Innovation) மற்றும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை (Industry 4.0) மேலும் ஊக்குவிக்கும்.
மிட்சுபிஷி எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த முதலீடு, அதிக எண்ணிக்கையிலான துணைத் தொழில்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து, மாநிலத்தின் மின்னணு உற்பத்தியை மேம்படுத்திட உதவும்.
0 Comments