TAMILNADU AGRI BUDGET 2025 - 2026
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 - 2026
TAMIL
TAMILNADU AGRI BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 - 2026: 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
கரும்பு, முந்திரி, தென்னை, காய்கறிகள், நீர்ப்பாசனம், விவசாய குடும்பத்தினருக்கான உதவித்தொகைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் மூலம், வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, விவசாயிகளைப் பற்றி புகழ்ந்துரைக்கும் திருக்குறள், புறநானூறு பாடல்களைக் கூறி தனது உரையைத் தொடங்கினார். முதலில்,
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
திருவள்ளுவர்
அதாவது, பல்வேறு அரசுகளை, தமது குடை நிழலின் கீழ் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள் உழவர்கள் என்று திருவள்ளுவர் புகழ்ந்துரைத்துள்ளார்.
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் அனைத்து மக்களையும் பாதுகாப்பார்கள் என்பது புறநாநூறு கூறும் சொல் என்று கூறி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்,
குடிபுறம் தருகுவை யாயின், நின்
அடிபுறந்த தருகுவர் அடங்கா தோரே
புறநானூறு பாடல் 35
காளை மாடுகளைப் போற்றி உழவு செய்யும் விவசாயிகளை நீ போற்றினால் அடங்காத உன் பகைவர் உன்னிடம் அடிபணிவர் என்று மன்னனுக்கு புலவர் அறிவுரை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளதாகக் கூறி உரையைத் தொடங்கியுள்ளார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
TAMILNADU AGRI BUDGET 2025 - 2026 / தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 - 2026: வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும்.
100 முன்னோடி விவசாயிகள் நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். உயிர்ம விவசாயிகளுக்கு இலவச உயிர்ம வாய்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும். உயிர்ம விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் ரூ.6.16 கோடியில் அமைக்கப்படும்.
உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.
நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு.
சிறு, குறு விவசாயிகளின் பயனுக்காக 130 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ரூ.10.50 கோடியில் உருவாக்கப்படும்.
முந்திரியின் பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.
வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும்.
ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும்.
பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை" உருவாக்கப்படும்.
மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.
விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் 3,000 மெட்ரிக் டன் விதைகள் சுத்திகரிக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும்.
ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கோடைகாலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.1 கோடியில் உதிரிவகை ரோஜா மலர்களின் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ள நறுமண ரோஜாவுக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.50 கோடியில் வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.
ரூ.1.35 கோடியில், காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.
0 Comments